» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விஜய் மல்லையாவின் ரூ.5,600 கோடி சொத்துகளை வங்கிகள் எடுத்துக்கொள்ளலாம்: சிறப்பு நீதிமன்றம்
வெள்ளி 4, ஜூன் 2021 11:42:58 AM (IST)
கடன் மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையாவின் 5,600 கோடி ரூபாய் சொத்துகளை வங்கிகள் எடுத்துக்கொள்ளலாம் என பண மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாடு தப்பி சென்றார். அவருக்கு எதிராக எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் கடந்த 2009ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த நீதிமன்றம் பிறப்பித்த இருவேறு உத்தரவுகளில் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5,600 கோடி ரூபாய் சொத்துகளை வங்கிகளிடம் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளது. பெங்களுருவில் உள்ள 564 கோடி ரூபாய் மதிப்பிலான கிங் பிஸ்ஸர் டவர், 713 கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி கட்டடம் உள்ளிட்டவையும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றோடு வங்கி முதலீடுகள் மற்றும் பங்குகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.