» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தடுப்பூசி செலுத்தியப் பிறகு கரோனா வந்தால் உயிருக்கு ஆபத்து இல்லை: எய்ம்ஸ் தகவல்
திங்கள் 7, ஜூன் 2021 11:44:19 AM (IST)
தடுப்பூசி செலுத்தியப் பிறகு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மரணமும் ஏற்படவில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.. இந்த தகவலை எய்ம்ஸ் மருத்துவமனையே வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நாடெங்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மிகவும் குறைவான இடங்களில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் போடப்படுகிறது.
இந்த 3 தடுப்பூசிகளும் இரண்டுமுறை போட வேண்டும். இரு டோஸ்கள் தடுப்பூசிகளையும் உரிய இடைவெளிக்குப் பின் போட வேண்டும். அதே வேளையில் ஒரு டோஸ் அல்லது இரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கூட கரோனா தொற்று ஏற்படுவதாக தகவல்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.
இதுதொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,ஆய்வில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனா வந்த 36 நோயாளிகளும்,ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் உட்படுத்தப்பட்டனர். இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் மீதம் உள்ளோர் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். கரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனையின் போது வைரஸ் அளவு அதிகமாகவும் காய்ச்சலும் இருந்தது.
காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்தது. தடுப்பூசி போடாமல் கரோனா பாதித்தவர்களைப் போன்றே இது இருந்தது. பாதிப்படைந்தோர் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மற்ற நோயாளிகளைப்போலவே மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்டாலும் யாருக்கும் மரணம் நிகழவில்லை” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.