» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காதலியை வீட்டில் மறைத்து 10 ஆண்டுகளாக ரகசிய வாழ்க்கை நடத்திய இளைஞர் : குடும்பத்தினர் அதிர்ச்சி!
வெள்ளி 11, ஜூன் 2021 4:56:21 PM (IST)
பாலக்காட்டில் காதலியை 10 ஆண்டுகளாக காதலியை வீட்டுக்குள் மறைத்து வைத்து இளைஞர் ஒருவர் வாழ்க்கை நடத்திய சம்பவம் குடும்பத்தினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஆயிலூர் கிராமத்தைச் சேர்ந்த ரஹ்மான் (34), தனது காதலி சஜிதாவை (28) ஒரு சிறு அறையில் மறைத்து வைத்து வாழ்ந்து வந்துள்ளார். சஜிதா, தனது வீட்டை விட்டு ஓடி வந்து, யாருக்கும் தெரியாமல் ரஹ்மானுடன் வாழ்ந்து வந்துள்ளார். அதுமட்டுமல்ல, சஜிதா அந்த வீட்டில் வசிப்பதை, ரஹ்மானின் குடும்பத்தினரே அறிந்திருக்கவில்லை.
எப்போதும் அந்த அறை உள்புறமும் வெளியேயும் பூட்டப்பட்டே இருக்கும். அந்த அறைக்குள்ளேயே சஜிதா வாழ்ந்து வந்துள்ளார். இரவில் மட்டுமே அந்த அறையிலிருந்து வெளியே வந்து தனது அன்றாட வேலைகளை செய்து கொள்வாராம். 10 ஆண்டுகள் இப்படியே வாழ்ந்து வந்த ரஹ்மான் - சஜிதா ஜோடி, கடந்த மார்ச் மாதம் வீட்டை விட்டு வெளியேறி தனிக்குடித்தனம் நடத்தியுள்ளனர். அப்போது அவரைக் கண்டுபிடித்த அவரது சகோதரர் மூலமாகத்தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ரஹ்மானும், அவரது பக்கத்து வீட்டுப் பெண்ணான சஜிதாவும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு தங்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கருதி, சஜிதா வீட்டை விட்டு வெளியேறி ரஹ்மான் வீட்டுக்கு வந்துள்ளார். அன்று முதல், அவர் அந்த அறையிலேயே வாழ்ந்து வந்துள்ளார். மகளைக் காணாமல் தேடிய சஜிதாவின் பெற்றோர், காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால், அவர்களுக்குக் கூட, தங்களது மகள் பக்கத்து வீட்டில் ஒரு அறையில்தான் இருக்கிறார் என்பது குறித்த எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் வெளியிலேயே தேடியுள்ளனர். முதலில், சில நாள்கள் அறையிலேயே இருந்துவிட்டு, பிறகு வெளியே வீடு எடுத்துத் தங்கிக் கொள்ள இந்த ஜோடி முடிவெடுத்திருந்த நிலையில், அதற்குப் போதிய வருவாய் இல்லாததால், இப்படியே 10 ஆண்டுகள் கடந்து விட்டதாகக் கூறுகிறார்கள். இதனை நம்ப முடியாத காவல்துறையினர், இருவரையும் தனித்தனியே வித்தியாசமாக விசாரித்தும், ஒரே விஷயத்தைத் தான் இருவருமே கூறியுள்ளனர்.
அந்த அறைக்கு அருகே வந்தாலே ரஹ்மான் கோபப்படும் போதெல்லாம், அவருக்கு ஏதோ மனப்பிரச்னை என்று நினைத்திருந்த அவரது பெற்றோருக்கு, அந்த அறையில் ஒரு இளம்பெண்ணும் 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கிறார் என்ற தகவலால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை