» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
லட்சத்தீவு நிர்வாகியை விமர்சித்த திரைப்பட பெண் இயக்குநர் மீது தேசதுரோக வழக்கு!
வெள்ளி 11, ஜூன் 2021 5:15:27 PM (IST)
லட்சத்தீவுகள் விவகாரம் தொடர்பாக லட்சத்தீவுகள் நிர்வாகியை விமர்சித்த திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.
லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. அவரின் புதிய உத்தரவுகள் லட்சத்தீவுகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி எதிர்க் கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் நடவடிக்கை மீது பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தான விமர்சனம் தெரிவித்து வந்தார். இதுதொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்குபெற்ற அவர், மத்திய அரசு லட்சத்தீவுகள் நிர்வாகியை உயிரி ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பாஜகவினர் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். ஆளும் அரசின் நிர்வாகியை தரக்குறைவாக விமர்சித்ததாக பாஜகவினர் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். பிரஃபுல் கோடா படேலின் நடவடிக்கையால் தான் லட்சத்தீவுகளில் கரோனா தொற்று பரவியதைக் குறிப்பிடவே தான் அவ்வாறு தெரிவித்ததாக ஆயிஷா சுல்தானா விளக்கமளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான தேசதுரோக வழக்கிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
unmaiJun 13, 2021 - 05:22:35 PM | Posted IP 162.1*****