» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்டா பிளஸ் வைரஸ்: 3 மாநிலங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு!
வியாழன் 24, ஜூன் 2021 5:28:24 PM (IST)
டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களையும் மத்திய சுகாதாரத்துறை உஷார் படுத்தியுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களிலும் தொற்று வந்தவர்களுக்கான கட்டுப்பாடுகளை இன்னும் முடுக்கும்படியும் அடிப்படை கட்டுப்பாட்டு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றும் வடியும் மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தியுள்ளார். டெல்டா ப்ளஸ் வைரஸ் கவனம் செலுத்த வேண்டிய வைரஸ் என்று மத்திய அரசு முன்பு வகைப்படுத்தி இருந்தது.
ஆனால் இப்பொழுது கவலைப்படுவதற்கு உரிய வைரஸ் என்று வகைப்படுத்தி உள்ளது. டெல்டா வைரஸ் மரபணுக்களில் சில இடங்களில் திருத்தம் அல்லது நியூ ஃபேஷன் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது இந்த திருத்தங்கள் உடைய டெல்டா வைரஸ் டெல்டா ப்ளஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனை அறிவியல் மொழியில் AY.1 என்று குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் இதுவரை மொத்தம் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றுக்கள் 40 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முதலில் டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் சேர்க்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் பெயர் சேர்க்கப்படவில்லை.மத்திய சுகாதாரத் துறையின் அறிக்கைக்காக காத்திருக்காமல் கேரள மாநில பத்தனம்திட்டா மற்றும் பாலக்காடு ஆகிய இரண்டு மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிவித்துள்ளனர்.
அந்த தொற்று உள்ள மாவட்டங்கள் இரண்டிலும் உள்ள கிராமங்கள் கடுமையான பாதுகாப்புக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது .அனைத்து கிராமங்களுக்கும் ஒரே வழியில் மட்டுமே கிராமத்துக்குள் வரலாம் அதேபோல கிராமத்துக்கு உள்ளே இருந்து ஒரே வழியில் மட்டுமே வெளியேற முடியும் .
மாவட்டத்தில் உள்ள நகரங்களில் எல்லாம் ஓட்டல்கள் இயங்க அரைமணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த அரை மணி நேரத்தில் உணவு பொருள்களை வாங்கிக் கொண்டு வெளியே தங்கள் சொந்த வீட்டுக்கு சென்று மக்கள் சாப்பிட வேண்டும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது கடைகள் சிறு வர்த்தக நிலையங்கள் ஆகியவை எல்லாம் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 10 நாடுகளின் மட்டுமே டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா. பிரிட்டன், போர்ச்சுக்கல், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாளம், சீனா, ரஷ்யா ஆகிய ஒன்பது நாடுகளுடன் இந்தியாவிலும் டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா ப்ளஸ் வைரஸ் அதிவிரைவில் பரவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அறிவியல் பூர்வமான விளக்கங்கள் இதுவரை தரப்படவில்லை.
இதுவரை கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் எல்லாம் டெல்டா ப்ளஸ் வைரஸை செய்யும் உதவும் என்று கூறப்படுகிறது. .ஆனால் அதற்கும் உறுதி செய்வதற்கான சான்றுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.