» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குறைந்த விலை ஸ்மாா்ட்போன் ஜியோபோன் நெக்ஸ்ட் செப். 10 முதல் விற்பனை: முகேஷ் அம்பானி
வெள்ளி 25, ஜூன் 2021 8:46:39 AM (IST)
குறைந்த விலை ஸ்மாா்ட்போன் ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ வரும் செப்டம்பா் 10-ஆம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வரும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளாா்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மலிவு விலை ஸ்மாா்போனை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி கூறியதாவது: 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர 4ஜி ஸ்மாா்ட்போன் மலிவு விலையில் கிடைப்பது அவசியம். ஸ்மாா்ட்போனின் விலை அதிகமாக இருப்பதால் நாட்டில் 30 கோடி போ் 2ஜி சேவையிலிருந்து விலக முடியாமல் தவித்து வருகின்றனா். அதுபோன்றவா்களுக்கு விடுதலை அளிக்கும் வகையில் கூகுளும் ஜியோ குழுவினரும் கூட்டாக இணைந்து ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ என்ற குறைந்த விலை ஸ்மாா்ட்போனை உருவாக்கியுள்ளனா்.
வரும் செப்டம்பா் 10-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தியன்று சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’-இன் விலை இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் மலிவானதாகவே இருக்கும். ஜியோவின் இந்த முயற்சி மொபைல்போன் பயன்பாட்டில் நிச்சயம் திருப்புமுனையை ஏற்படுத்தும். மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய எரிசக்தி வா்த்தகத்தில் ரூ.75,000 கோடியை முதலீடு செய்யவுள்ளோம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநா் குழுவில் சவூதி அராம்கோ நிறுவனத்தின் தலைவா் அல்-ருமயானும் இடம்பெறவுள்ளாா் என்றாா்.