» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உ.பி., உத்தரகண்ட் சட்டப் பேரவைத்தேர்தலில் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு
திங்கள் 28, ஜூன் 2021 11:47:41 AM (IST)
உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி அறிவித்தாா்.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் போட்டியிட்டது. அப்போது மாயாவதியின் கட்சிக்கு அதிகபட்சமாக 10 இடங்களிலும், சமாஜவாதி கட்சிக்கு 5 இடங்களில் வெற்றி கிடைத்தது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக பெரும்பாலான இடங்களில் வென்றது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைப்பாடு குறித்த தகவலை மாயாவதி சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில், ‘ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியுடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சி தோ்தலைச் சந்திக்க இருக்கிறது என்று சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அவை முற்றிலும் தவறானது. உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிட இருக்கிறது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை. பஞ்சாப் மாநிலத்துக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது’ என்று கூறியுள்ளாா்.
பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் பகுஜன் சமாஜ் அண்மையில் கூட்டணி அறிவித்தது நினைவுகூரத்தக்கது. இப்போது 65 வயதாகும் மாயாவதி 4 முறை உத்தர பிரதேச முதல்வராக இருந்துள்ளாா். அண்மையில் அவரது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 9 எம்எல்ஏக்கள் சமாஜவாதி கட்சியில் இணைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.