» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஐரோப்பிய யூனியனில் கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரிக்க நடவடிக்கை: சீரம் நிறுவனம் கோரிக்கை
செவ்வாய் 29, ஜூன் 2021 12:24:57 PM (IST)
ஐரோப்பிய யூனியனில் தடுப்பூசி பாஸ்போர்ட்டில், கோவிஷீல்டு தடுப்பூசியை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சீரம் இந்தியா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
பைசர், மாடர்னா, வாக்ஸ்ஸர்வ்ரியா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நான்கு கொரோனா தடுப்பூசிகளை மட்டுமே ஐரோப்பிய யூனியன் அங்கீகரித்துள்ளது. எனவே, இந்த நான்கு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே ஐரோப்பிய யூனியனுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.இதனால், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட நம் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இதர பிரிவினர், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு பயணிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டில் 30 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்கனவே போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணியின் இறுதியில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு இருக்கும்.
எனவே, ஐரோப்பிய யூனியனின் தடுப்பூசி பாஸ்போர்ட்டில் கோவிஷீல்டு இணைக்கப்படாதது, மாணவர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இது உலக அளவில் பொருளாதார இழப்புகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்ப்பதாக அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.