» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பூசியால் மலட்டுத் தன்மை ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்

வியாழன் 1, ஜூலை 2021 8:44:48 AM (IST)

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரமில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆண், பெண் ஆகிய இருவருக்கும் மலட்டுத் தன்மை ஏற்படுவதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கத்தை அரசு அளித்துள்ளது. மேலும், கரோனா தடுப்பூசி இருபாலரிடையேயும் நல்ல பலனை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு, பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

மலட்டுத் தன்மை விவகாரம் தொடர்பாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறை தங்களது வலைதளத்தில் பதிலளித்து வருகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மலட்டுத் தன்மை ஏற்பட்டதாக ஒரு புகாரும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசிகள் முதலில் விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. மனிதர்களிடையேயும் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே சந்தையில் பொதுமக்களுக்கு விநியோகிக்க அரசு அனுமதி அளித்தது.

கரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறனை பரிசோதனை செய்த பிறகே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படுவதாக வதந்திகள் பரவுகின்றன. ஆனால் அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கரோனா நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவரும் மருத்துவருமான என்.கே.அரோரா கூறியதாவது, போலியோ தடுப்பு மருந்து போடும்போதும் இதுபோன்ற வதந்திகள் பரவின. போலியோ தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட குழந்தைகள் எதிர்காலத்தில் மலட்டுத் தன்மையை சந்திப்பார்கள் என்று வதந்தி பரவியது. எந்தவொரு தடுப்பூசியும் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. எதிலும் இதுபோன்ற மிகப்பெரிய பிரச்னைகளுக்கு காரணமான  பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory