» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மம்தா பானர்ஜிக்கு ரூ. 5 லட்சம் அபராதம்: கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 7, ஜூலை 2021 3:54:05 PM (IST)
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம், முதல்வர் மம்தா பானர்ஜி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். நந்திகிராம் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கினை நீதிபதி கௌசிக் சந்தா விசாரிக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதாவது நீதிபதி கௌசிக் சந்தா, பாஜக தலைவர்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருப்பதாகவும், இதனால் வழக்கின் விசாரணை ஒருதலைபட்சமாக இருக்கும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்காது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நீதிபதி கௌசிக் சந்தா வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். நீதிபதி தானாக விலகினாலும், நீதிமன்றத்தின் மாண்பினை சீர்குலைக்கும் விதமாக மம்தா பானர்ஜி நடந்துகொண்டதால் அவருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.