» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கொலை வழக்கு கைதான 2பேரிடம் போலீசார் தீவிர விசாரணை!
வெள்ளி 9, ஜூலை 2021 4:05:44 PM (IST)
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கொலை வழக்கில் கைதான 2 பேருக்கு 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி வசந்த் விகார் பகுதியில் வசித்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி (68) 2 நாட்களுக்கு முன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து கொலையாளிகள் நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வசந்த் விகார் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளான சலவைத் தொழிலாளி ராஜீவ் மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்தும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் துணிமணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. நகைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நகைகள் பற்றி விசாரிக்கவும், கொலை தொடர்பாக மேலும் விவரங்கள் சேகரிக்கவும் அவர்களை போலீஸ் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்று 3 நாள் போலீஸ் காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார், குற்றவாளிகள் 2 பேரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை போன நகைகள் பற்றி கேட்டதற்கு, "வீட்டில் எவ்வளவு நகைகள் இருந்தன? அதில் எவ்வளவு காணாமல் போயிருக்கிறது? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளிடமும் விசாரணை நடக்கிறது. போலீஸ் காவல் விசாரணைக்கு பிறகு நகைகள் பற்றிய விவரம் தெரியவரும்” என விசாரணை நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.