» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தடுப்பூசி பற்றாக்குறை எதிரொலி: மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி வழங்க மத்திய அரசு பரிசீலனை
திங்கள் 12, ஜூலை 2021 5:26:34 PM (IST)
ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்துள்ள சைக்கோவ்- டி என்ற கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து மத்திய சுகாதாரத் துறை தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .
இந்தியாவின் பல மாநிலங்களிலும் மத்திய அரசு தலைநகரான டெல்லியிலும் கரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது அதனால்தான் மத்திய அரசு அவசர அவசரமாக இன்னொரு கரோனா தடுப்பூசி மருந்துக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது என்ற கருத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்தனர்.
கடந்த ஜூலை மாதம் முதல் தேதியன்று சைக்கோவ்-டி தடுப்பூசி மருந்தை இந்தியாவில் அவசரகால மருந்தாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் மத்திய அரசுக்கு கோரிக்கை முன்வைத்தது. சைக்கோவ் -டி தடுப்பூசி மருந்து முதலிரண்டு கட்ட சோதனைகளிலும் நல்ல முடிவை காட்டியுள்ளன. மூன்றாவது கட்ட சோதனைகள் முடிந்து சோதனை விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன
மற்ற கரோனா தடுப்பூசிகள் எல்லாம் இரண்டு.டோஸ்களை கொண்டவை. ஆனால் சைக்கோவ் டி மட்டும் 3 டோஸ் மருந்தாகும் இந்த 3 டோஸ்களை பயன்படுத்தினால்தான் முழுமையான எதிர்ப்புத்திறன் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 38.86 கோடி தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இன்னும் பயன்படுத்தப்படாமல் 1.54 கோடி தடுப்பூசி மருந்துகள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் உள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வயதானவர்களுக்கும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் கரோனா தொற்று 4 முதல் 12 வாரங்கள் வரை நீடிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட காலம் நீடிக்கும் இந்த கரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவர்கள் லாங் கோவிட் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
18 வயதுக்கும் மேல் 49 வயதுக்கும் உள்ளே இருப்பவர்களில் 10% பேர் இந்த நீண்ட கோவிட் தொற்று காரணமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் 22% பேர் இந்த நீண்ட கரோனா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் மருத்துவ புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சிலருக்கு ஓர் ஆண்டு வரை கூட தொற்று அறிகுறிகள் நீடிக்கலாம் என்று மருத்துவர்கள் கருத்து கூறியுள்ளனர்