» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மனைவியின் தற்கொலையை தடுக்காமல் வீடியோ எடுத்த கொடூர கணவன்: ஆந்திராவில் அதிர்ச்சி!
சனி 25, செப்டம்பர் 2021 4:58:24 PM (IST)
ஆந்திராவில் குடும்பத் தகராறில் மனம் உடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்காமல், விடியோ எடுத்த கணவரை காவல்துறை கைது செய்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டம் அட்மகூர் நகரில், 38 வயதாகும் பெஞ்சலைய்யா, ஏடிஎம் மையத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி கொண்டம்மாவின் (31) நடத்தை மீது சந்தேகப்பட்டு அவ்வப்போது தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு, இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கொண்டம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
ஆனால், அவரைத் தடுக்காத பெஞ்சலைய்யா, நான் உன்னை தடுக்க மாட்டேன், உன் உயிரை மாய்த்துக் கொள்வதாக இருந்தால் செய். இந்த விடியோவை உனது சகோதரனுக்கு காண்பிப்பேன் என்று கூறி விடியோவை எடுத்துள்ளார். இந்த விடியோவில், தான் தற்கொலை செய்து கொள்ள முயலும் போது, தனது கணவர் நிச்சயம் தடுத்து நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அந்த பெண்ணின் கண்களில் தெரிவது பதிவாகியுள்ளது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை. தூக்கில் தொங்கி துடிதுடித்துக் கொண்டிருக்கும் போதும், பெஞ்சலைய்யா விடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
பிறகு, அந்த விடியோவை மனைவியின் சகோதரருக்கு அனுப்பியுள்ளார். இந்த விடியோவைப் பார்த்ததும், பெண்ணின் பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க, பெஞ்சலைய்யா கைது செய்யப்பட்டார். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதை தடுத்து நிறுத்தாமல், விடியோ எடுத்தது மட்டுமல்லாமல், அதனை சகோதரருக்கும் அனுப்பிய நபர் பற்றிய செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இளகிய மனம் படைத்தோரும், குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் காண முடியாத வகையில் இருக்கும் அந்த விடியோ பல்வேறு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.