» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவை வலிமையாக மாற்ற வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கலாம்: பிரதமர் மோடி புகழாரம்
வெள்ளி 15, அக்டோபர் 2021 10:56:23 AM (IST)
இந்தியாவை வலிமையாகவும் வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல் கலாம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90-வது பிறந்த தினம் இன்று ஆகும். பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் பேய்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;- ஏவுகணை நாயகனாக அறியப்படும் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவை வலிமையாகவும் வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல் கலாம். அப்துல் கலாம் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.