» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவை உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக மாற்றுவதே அரசின் இலக்கு - பிரதமர் மோடி
வெள்ளி 15, அக்டோபர் 2021 5:24:09 PM (IST)
இந்தியாவை உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் சுயசார்பை மேம்படுத்தும் வகையில், 41 ஆயுத தொழிற்சாலைகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் 7 பாதுகாப்பு நிறுவனங்களாக மாற்றப்பட்டு உள்ளன. அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் 7 பாதுகாப்பு நிறுவனங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: -சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் பல பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் இது முன்பை இருந்ததை விட அதிக வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் கொண்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்த போதும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை.
சுயசார்பு இந்தியா' கொள்கையின் கீழ், இந்தியாவை தனது சொந்த பலத்தில் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதையும், நவீன ராணுவ தொழிற்சாலைகளை உருவாக்கி மேம்படுத்துவதுமே, நாட்டின் குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், இந்த தீர்மானத்தையும், 'மேக் இன் இந்தியா' என்ற தாரக மந்திரத்தையும் நோக்கி தேசம் சென்றுள்ளது. புதிய எதிர்காலத்திற்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, நீண்ட காலமாக கிடப்பில் இருந்த திட்டங்கள் முடிக்கப்பட்டு வருகின்றன. இந்த 7 நிறுவனங்களும் தங்கள் பணி காலத்தில் 'ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு' முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எதிர்கால தொழில்நுட்பத்தில் நீங்கள் முன்னிலை வகிக்க வேண்டும், ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குங்கள் என பிரதமர் கூறினார்.