» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்துக்கள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்: விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்
சனி 15, ஜனவரி 2022 9:59:27 AM (IST)
இந்துக்களின் மக்கள் தொகை குறையாமல் தடுக்க அவர்கள் குறைந்தது மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் பேசியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் கண்ட்வாவில் வி.எச்.பி., மற்றும் பஜ்ரங்தள் சார்பில் இந்து இளைஞர்கள் மாநாடு நடந்தது. இதில் வி.எச்.பி., மூத்த தலைவர் மிலிந்த் பராண்டே பேசியதாவது:நாட்டின் மக்கள் தொகையில் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மதமாற்ற நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. இதை தடுக்க வேண்டும். இல்லாவிடில் இன்னும் 50 ஆண்டுகளில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாகி விடுவர்.
இது நாட்டுக்கே ஆபத்தாகிவிடும். இந்தியா மீண்டும் அந்நியரிடம் அடிமைப்படும் அபாயத்தை தடுக்க வேண்டும். அதனால் இந்து சமூகத்தை பாதுகாக்க, இந்து இளைஞர்கள் அனைவரும் திருமணத்துக்கு பின், குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாததால் தான், நாடு முதலில் முஸ்லிம்களிடமும், பின் ஆங்கிலேயர்களிடமும் அடிமைப்பட்டது.
ஆங்கிலேயர் வருவதற்கு முன் நம் நாடு கல்வியறிவில் சிறந்து விளங்கியது. இதை சீரழிக்கும் நோக்கில் தான் 'மெக்காலே' கல்வி திட்டத்தை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். இதன் வாயிலாக நம் முன்னோர்களை அறிவில்லாதவர்கள், ஒன்றும் தெரியாதவர்கள் என, நம்மிடம் ஆங்கிலேயர்கள் போதித்தனர். மெக்காலே கல்வி திட்டத்தை, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மாற்றியமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.