» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அக்னிபாதை வீரர்களுக்கு மகேந்திரா நிறுவனத்தில் வேலை: ஆனந்த் மகேந்திரா உறுதி
திங்கள் 20, ஜூன் 2022 3:47:30 PM (IST)
அக்னிபாதை பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பை மகேந்திரா குழுமம் வரவேற்கிறது என அந்நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபதிபருமான ஆனந்த் மகேந்திரா கூறியுள்ளார்.
ராணுவத்துக்கு புதிதாக இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களை போராட தூண்டியதாக பிஹார், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மீது புகார் எழுந்துள்ளதால் பயிற்சி நிறுவனங்களை போலீஸார் கண்காணிக்கின்றனர்.
இந்தநிலையில் அக்னிபாதை பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு பணி வழங்குவதாக மகேந்திரா குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபதிபருமான ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"அக்னிபாதை திட்டத்தையொட்டி நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோதே அக்னிவீரர்களின் ஒழுக்கம் மற்றும் திறன்களைப் பெறுவது அவர்களை சிறந்த வேலைவாய்ப்பாக மாற்றும் என நான் அப்போதே சொன்னேன். இதனை மீண்டும் மீண்டும் நான் கூறுகிறேன். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது.
கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்கள் பெரிய அளவில் வேலைவாய்ப்புக்கள் பெறுவதற்கான பெரிய வாய்ப்புகள் உள்ளன. தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் உடல் பயிற்சி ஆகியவற்றுடன் தயாராகும் அக்னிவீரர்கள் தொழில்துறைக்கு சந்தைக்கு தேவையான தொழில்முறை தீர்வுகளை வழங்குவர். செயல்பாடுகள் முதல் நிர்வாகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை வரையிலான முழு அளவிலான தேவைக்கு ஏற்ற தீர்வாக இருப்பார்கள்.’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.