» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிப்பு
செவ்வாய் 21, ஜூன் 2022 5:15:45 PM (IST)
குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை முடிவு செய்ய எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் துணைத் தலைவராக இருந்த யஷ்வந்த் சின்கா, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தனது ராஜினாமா கடிதத்தை திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி இருந்தார். அதனை உறுதி செய்யும் வகையில் ட்வீட் ஒன்றும் அவர் செய்திருந்தார். அதில் எதிர்க்கட்சிகளின் நலனுக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜக தரப்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் வெகு விரைவில் உறுதி செய்யப்படுவார் எனத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வரும் ஜூன் 29-ஆம் தேதி கடைசி தேதியாகும். தேவைப்படும் பட்சத்தில் ஜூலை 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.