» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்குங்கள் : பைடனிடம் இந்திய வம்சாவளி எம்பிக்கள் வலியுறுத்தல்!
வியாழன் 20, மே 2021 5:41:31 PM (IST)
இந்தியாவில் தற்போது நிலவும் மோசமான சூழ்நிலையில், உடனடியாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபரிடம் இந்திய வம்சாவளி எம்பிக்கள் வலியுறுத்தினர்.
கரோனா வைரசின் 2வது அலையால் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. கரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பியவண்ணம் உள்ளன. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு 8 கோடி தடுப்பூசி டோஸ்களை அமெரிக்க அரசு வழங்க உள்ளதாக அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்த 8 கோடி டோஸ்களில், 6 கோடி தடுப்பூசி டோஸ்களை இந்தியாவுக்கு ஒதுக்கும்படி இந்திய வம்சாவளி எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவில் உரிமைகள் ஆர்வலர் ரெவ் ஜெஸ்சி ஜாக்சன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் காணப்படும் கரோனா வைரசின் மாறுபாடு, உலகின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று ரெவ் ஜாக்சன் அச்சம் தெரிவித்தார். இந்தியாவில்
தற்போது நிலவும் மோசமான சூழ்நிலையில், உடனடியாக தடுப்பூசிகள் தேவை என்று ரெவ் ஜாக்சன் வலியுறுத்தினார். வைரசை கட்டுப்படுத்த நாம் உதவுவதன்மூலம் நமக்கும் உலகிற்கும் உதவுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு உதவி செய்வதாக கிருஷ்ணமூர்த்தி எம்பி உறுதி அளித்தார். இதுபற்றி அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உதவி வந்து கொண்டிருப்பதாகவும், தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் கூறினார்.