» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தானில் அல் கொய்தாவுடன் தலீபான்கள் நெருங்கிய தொடர்பு: அமெரிக்கா எச்சரிக்கை
வெள்ளி 21, மே 2021 4:17:58 PM (IST)
ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா தீவிரவாத அமைப்புகளுடன் தலீபான் பயங்கரவாதிகள் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமெரிக்கா தலைமையிலான அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஒருபுறம் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலீபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், வருகிற செப்டம்பர் 11ந்தேதிக்குள் படைகளை முழுமையாக வாபஸ் பெற்று கொள்ளும் பணியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. ஆனால், இது ஒருபுறம் இருக்க தலீபான் பயங்கரவாதிகள் தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலீபான் பயங்கரவாதிகள் ஹெல்மண்ட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை நேற்று வெடிக்க செய்ததில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 2 சிறுவர்கள் காயமடைந்தனர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க அரசின் புலனாய்வு அமைப்பு ஒன்று தகவல் தெரிவித்து உள்ளது. இதன்படி, தலீபான் பயங்கரவாதிகள், அல் கொய்தா அமைப்புடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தி கொண்டுள்ளனர். அவர்கள் ஆப்கானிய அரசு மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மையங்களின் மீது பெரிய அளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு தயாராகி வருகிறார்கள் என்றும் தெரிவித்து உள்ளது.