» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பீர் இலவசம் : பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!
வியாழன் 3, ஜூன் 2021 11:19:13 AM (IST)
அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவசமாக பியர் வழங்கப்படும் மது தயாரிப்பு நிறுவனம் கவர்ச்சிகர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலக அளவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 29,69,12,892 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் இதுவரை 16,87,34,435 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 13,61,55,250 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வரும் ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்திற்குள் 70 சதவீத மக்களுக்கு குறைந்தபட்ச ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் என்ற இலக்கை அதிபர் பைடன் அரசு முடுக்கிவிட்டுள்ளது. தற்போது வரை 63 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்த மக்களை ஊக்குவிக்க புதிய முறையை அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர்-புஷ்ச் கையாண்டு உள்ளது. அதன்படி குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பீர் வழங்குவதாக அறிவித்து உள்ளது. அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள 4 முன்னணி குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் முன்வந்து உள்ளது. மேலும் நாடு முழுவதும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தடுப்பூசி பிரசாரம் மேற்கொள்கிறார்.