» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கரோனா விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இருக்க தொடர்ந்து அழுத்தம் தருவோம்: அமெரிக்கா உறுதி
செவ்வாய் 8, ஜூன் 2021 12:50:34 PM (IST)
கரோனா வைரஸ் தரவுகள் விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவி லட்சக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கரோனா பரவியதாக கருதப்படுகிறது.
அதே சமயத்தில், கரோனா வைரசை சீனா தனது உகான் பரிசோதனை கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர். எனவே, கரோனா எப்படி தோன்றியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து விசாரணையில் இறங்கினர். உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற இடங்களுக்கும் நேரில் சென்றனர்.
இதுதொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து கரோனா தோற்றம் குறித்த கூடுதல் தரவுகளை வெளியிட உலக சுகாதார நிறுவனம் சீனாவை கட்டாயப்படுத்த முடியாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரி ஒருவர் நேற்று கூறியுள்ளார். மேலும் கரோனா வைரஸ் "அடுத்த நிலைக்கு" எங்கு தோன்றியது என்பதை அறிந்து கொள்ள தேவையான ஆய்வுகளை உலக சுகாதார அமைப்பு முன்மொழிகிறது என்றார்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தரவுகள் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஜேக் ஸ்லிவன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா வைரஸ் தொடர்பான தரவுகளில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் இருக்க சர்வதேச நாடுகளின் துணையுடன் நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். விசாரணையில் பங்கேற்காமலும், தரவுகளை பகிரமாட்டோம் என சீனா கூறுவதை கேட்டுக்கொண்டு அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டோம்' என்றார்.