» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஏழை நாடுகளுக்கு ஜி7 நாடுகள் கரோனா தடுப்பூசி வழங்கும் - தலைவர்கள் உறுதி
ஞாயிறு 13, ஜூன் 2021 9:21:03 PM (IST)
உலகில் உள்ள ஏழை நாடுகளுடன் கரோனா தடுப்பூசியை பகிர்ந்து கொள்ள ஜி7 நாடுகள் உறுதியளித்தன.
பிரான்ஸ் நாட்டில் 2019ல் ஜி7 மாநாடு நடைபெற்றது. 2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜி-7 நாடுகள் மாநாடு நடைபெற வேண்டும். ஆனால் கரோனா பெரும் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஜி7 மாநாடு நடைபெறவில்லை. அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பிரிட்டனில் ஜி7 மாநாடு உற்சாகமாக நடைபெற்றது. 3 நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல் நாளன்று பிரிட்டன் ராணியார் ஜி7 மாநாட்டுக்காக வந்திருந்த தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த பொழுது அமெரிக்காவுக்கே முதலிடம் என்ற கொள்கையைப் பின்பற்றினார். அந்த அணுகுமுறை மற்ற நாடுகளுக்கு உற்சாகத்தை தரவில்லை. அமெரிக்க அதிபராக பிடேன் பொறுப்பேற்ற பின் தொடர்ந்து ஜி-7 நாடுகளில் உற்சாகம் மீண்டும் தலை தூக்கியது.அமெரிக்க அதிபராக பிடேன் பொறுப்பேற்றது ஜி7 மாநாட்டுக்கு புத்துயிர் தந்தது என்று ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மாநாட்டின் இறுதி நாளான இன்று ஜி7 தலைவர்கள் உலக நாடுகளுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார்கள்.சிறுமியரின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், எதிர்காலத்தில் மற்றொரு பெரும் தொற்று தோன்றவிடாமல் தடுத்தல், சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்தாத வளர்சிக்கு நிதி உதவி அளித்தல், ஆகியவை குறித்து ஜி7 தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர்.
உலகில் உடனடியாக கரோனா தடுப்பு ஊசி தேவைப்படும் ஏழை நாடுகளுக்கு ஜி7 அமைப்பு உதவும் என்று தலைவர்கள் உறுதியளித்தனர். .அமெரிக்கா 100 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்கும் என்றும் 10 கோடி தடுப்பூசிகளை பிரிட்டன் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் அதானம் வரும் 2022ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஆயிரத்து நூறு கோடி தடுப்பூசி தேவை என்று குறிப்பிட்டார்.இந்தப் பின்னணியில் ஜி7 தலைவர்களின் வாக்குறுதிகள் போதுமானவை அல்ல என்று கருத்து கூறப்பட்டது.
ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் மாசு ஏற்படுத்தாத ரயில்வே கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு ஜி7 நாடுகள் உதவும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. உலகில் இயங்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக 15 சதவீதம் வரி விதிக்கும் தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் ஜி7 மாநாட்டின் இறுதி பிரகடனம் அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்களை அரசு கொடுமைப்படுத்துவதை கண்டிக்கும் வகையில் ஜி7 நாடுகள் உட்பட உலக நாடுகள் எல்லாம் ஒரே குரலில் பேச வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பிடேன் வலியுறுத்தினார்.