» செய்திகள் - விளையாட்டு » உலகம்
யோகா நேபாளத்தில் தோன்றியது; இந்தியாவில் அல்ல: பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை பேச்சு
செவ்வாய் 22, ஜூன் 2021 12:35:28 PM (IST)
யோகா நேபாளத்தில் தோன்றியது என்றும், இந்தியாவில் அல்ல என்றும் அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானதாக யோகா கருதப்படுகிறது. நேற்று 7-வது யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பேசியதாவது: யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப் பட்டபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை. பல ராஜ்ஜியங்களாக இருந்தது.
நேபாளத்தில் தான் யோகா தோன்றியது. அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம். ஆனால் இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார். நம் நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்கு தெரிவிக்க தவறிவிட்டோம். நேபாளத்தில் உள்ள அயோத்தியா புரியில் தான், ராமர் பிறந்தார். சீதாவும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில் பிறந்தவர். முனிவர் வால்மீகியும் இங்கு தான் பிறந்தார். ஆனால் இந்த வரலாறு திருத்தப்பட்டுவிட்டது. அதை சரி செய்ய வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.