» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உருமாறிய கரோனா வைரசுக்கு கோவாக்சின் தடுப்பூசி சிறந்தது : அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தகவல்
வியாழன் 1, ஜூலை 2021 4:45:55 PM (IST)
கிட்டதிட்ட 16 நாடுகளில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி, உருமாறிய கரோனா வைரசை கட்டுப்படுத்துகிறது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசிக்கு, இந்தியா உள்ளிட்ட பிரேசில், பிலிப்பைன்ஸ், ஈரான், மெக்சிகோ உள்ளிட்ட 16 நாடுகளில் அவசர பயன்பாட்டுகான அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், உலகமெங்கும் உள்ள 50 நாடுகளில் அவசர பயன்பாட்டு அனுமதி தொடர்பான செயல்முறைகள் நடைமுறையில் உள்ளன.
கோவேக்சின் தடுப்பூசிகள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், பல நாடுகளை பயமுறுத்தி வரும் டெல்டா வைரஸ் மற்றும் ஆல்பா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி திறம்பட செயல்படுவதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்.) கண்டுபிடித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கோவேக்சின் போட்டுக் கொண்டர்களிடம் ரத்த ‘சீரம்’ பெற்று 2 ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில், இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்குகிறது.
மேலும் ஆல்பா (பி.1.1.7) மற்றும் பி.1.617 (டெல்டா) வகை வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகிறது. கோவேக்சின் சார்ஸ்-கோவ்-2 வின் முடக்கப்பட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. இதை நகல் எடுக்க முடியாது. ஆனால் வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு பொருளை உருவாக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது. 3வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள், இது நோய்க்கு எதிராக 78 சதவீத செயல்திறனையும், கடுமையான கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 100 சதவீத செயல்திறனையும் கொண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.