» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் பேருந்தில் குண்டு வெடிப்பு: 9 சீனர்கள் பலி - அதிகாரிகள் தீவிர விசாரணை
புதன் 14, ஜூலை 2021 5:50:39 PM (IST)
பாகிஸ்தானில் பேருந்தில் குண்டு வெடித்தததில் 9 சீனர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த பாகிஸ்தானை சீன அரசு வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கைபர் பக்தூன் காவா மாநிலத்தில் தசு அணைக்கட்டு திட்டப் பகுதிக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்றில் குண்டு வெடித்தது. இதனால் பேருந்து மலைச்சரிவில் கீழே உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் சீன பொறியாளர் மற்றும் தொழிலாளர் உள்பட 9 சீனர்கள் உயிரிழந்தனர். இவர்களை தவிர மேலும் 4 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தார்கள். இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்த அணை கட்டும் பகுதியில் சீன பொறியாளர்களும் சீன தொழிலாளர்களும் பெரும் எண்ணிக்கையில் பணியாற்றி வருகிறார்கள். பெஷாவர் நகரில் இருந்து அணை கட்டப்படும் இடத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பேருந்தில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டது. சாலையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததா? அல்லது பேருந்திலேயே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை முழுமையாக நடைபெற வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு சீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.