» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கள்ளச்சந்தையில் விற்க பதுக்கிய ரெம்டெசிவிர் குப்பிகள் பறிமுதல் மருந்து கடை உரிமையாளர் கைது
வெள்ளி 14, மே 2021 12:00:26 PM (IST)
கோவில்பட்டியில் ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கிய மருந்து கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 42 குப்பிகள் மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரித்துவருவதை அடுத்து மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மறுபுறம் கரோனா சிகிச்சைக்கான மருந்துகளை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இதனை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. ஆங்கங்கே கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருபவர்கள் கைது செய்யபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் மேட்டுகாளியம்மன் கோவில் தெருவில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள மொத்த மருந்து விற்பனை கடையில் ரெம்டெசிவிர் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையெடுத்து கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரெம்டெசிவிர் மருந்து 42 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையெடுத்து கடையின் உரிமையாளர் காந்திநகரைச் சேர்ந்த சண்முகம் என்பவரை போலீசார் கைது செய்து 42 ரெம்டெசிவிர் குப்பிகளை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தியத்தில் நெல்லை, மதுரையில் ரூ16 ஆயிர ரூபாய்க்கு ரெம்டெசிவிர் மருந்தினை வாங்கி வந்து 20 ஆயிர ரூபாய் முதல் 30 ஆயிர ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது, மதுரை, நெல்லையில் யாரிடம் வாங்கினார்கள் என்பது குறித்தும், இதன் பின்னால் இருக்கும் கும்பல் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
M.sundaramமே 15, 2021 - 05:10:23 AM | Posted IP 108.1*****