» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல் : விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்!!!
சனி 15, மே 2021 11:44:55 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. போலீசார் தீவிர சோதனயில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் (15.05.2021) அமலுக்கு வந்தன. அதன்படி, காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 10மணிக்கே மூடப்பட்டன. மக்கள் கூடுவதைத் தடுக்க தமிழகத்தில் தேநீர் கடைகள் இயங்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகளைத் திறக்க வழக்கம்போல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏ.டி.எம். மையங்கள், பெட்ரோல், டீசல் பங்க்குகள் எப்போதும்போல செயல்படுகிறது. முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் விவிடி சிக்னல், குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சிட்டி டவர் ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் ஏடிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார், மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கு விதிகளைமீறி அத்தியாவசிய தேவைகள் இன்றி வாகனங்களை சென்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் இன்று காலை வரை வாகனங்களில் சுற்றித்திரிந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 17ம்தேதி முதல் முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ - பதிவு கட்டாயம். திருமணம், மருத்துவ சிகிச்சை, இறப்பு, முதியோர் தேவை போன்றவற்றுக்கு இ - பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கும் இ - பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.00 மணிமுதல் காலை 04.00 மணிவரையிலான ஊரடங்கு அமலில் இருக்கும். தமிழகத்தில் ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்கு மே 23ஆம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.
M.Sheik.மே 15, 2021 - 03:41:46 PM | Posted IP 162.1*****