» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் உதவி ஆட்சியராக பயிற்சி பெறும் நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் - பாராட்டுக்கள் குவிகிறது!
செவ்வாய் 3, ஆகஸ்ட் 2021 12:08:37 PM (IST)
நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய், ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்று தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
90களில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் கலக்கியவர் சின்னி ஜெயந்த். ரஜினிகாந்த், விஜய், அஜித், பிரஷாந்த் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்களின் படத்தில் நடித்துள்ளார். மேலும் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்திய குடிமைப் பணி தேர்வில் கலந்துகொண்டு, 75 வது ரேங்க் பெற்று வெற்றிபெற்றார்.
தற்போது அவர் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 3 மாதங்களாக அவர் அங்கு பணிபுரிந்து வருகிறார். ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு சார் ஆட்சியராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. தற்போது மிக ஆர்வமாக தனது பணியை மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.
இதுகுறித்து நடிகர் சின்னி ஜெயந்த் கூறுகையில்``யு.பி.எஸ்.சி தேர்வுல அகில இந்திய அளவுல 75 வது இடத்தை என்னோட மகன் ஸ்ருபதன் ஜெய் பெற்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்படி இதை வெளிப்படுத்துறதுனே தெரியல. முதல்ல இந்த சந்தோஷத்தை சிவாஜி ஐயாவின் மூத்த மகன் ராம்குமார்கிட்ட பகிர்ந்துகிட்டேன். ஏன்னா, மூத்த மகன் பிறந்தவுடனே ஸ்ருபதன் ஜெய்னு பேர் செலக்ட் பண்ணுனது அவர்தான். இதுக்கு அடுத்து என்னோட ஆசான் ரஜினி சார்க்கும் சொன்னேன்.
``நம்ம கஷ்டப்பட்டு உழைச்சதை, பிள்ளைகள்கிட்ட இருந்து எதிர்பார்ப்போம். உன்னோட மகன் கொஞ்சம் வித்தியாசமா கல்வி மூலமா வெற்றியடைஞ்சிருக்குறது ஒட்டுமொத்த திரையுலகத்துக்கே பெருமையா இருக்கும். எனக்கு ரொம்ப சந்தோஷம்"னார். இதுமட்டுமல்லாம, `கொரோனா முடிஞ்சவுடனே வீட்டுக்கு பையனை அழைச்சிட்டு வா'னு சொல்லியிருக்கார். அதே மாதிரி சிவகுமார் அண்ணன், `தமிழ் சினிமால யு.பி.எஸ்.சி தேர்வுல ஜெயிச்ச முதல் ஆள் உன் பையன்தான்னு' சொன்னப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குனு'' சின்னி ஜெயந்த் சொல்லி முடிக்கவும் மகன் ஜெய் தொடர்ந்து பேசினார்.
TUTICORIN MAKKALAug 3, 2021 - 03:38:13 PM | Posted IP 162.1*****