» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆதார் பதிவுக்காக அலைக்கழிப்பு: 2 குழந்தைகளுடன் இளம்பெண் திடீர் சாலை மறியல் - பரபரப்பு!!
புதன் 4, ஆகஸ்ட் 2021 5:06:36 PM (IST)
திசையன்விளையில் ஆதார் பதிவுக்காக அலைக்கழிக்கப்பட்டதால் இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை, பட்டைகுளத்தைச் சேர்ந்தவர் புஷ்பா. இவர் தனது இரு பெண் குழந்தைகளின் ஆதார் பதிவுக்காக அங்குள்ள தபால் அலுவலகத்திற்கு கடந்த 4 நாட்களாக அலைந்தும், ஆதார் பதிவு செய்ய முடியவில்லையாம். இந்நிலையில், இன்று காலை தனது 2 பெண் குழந்தைகளுடன் ஆதார் பதிவு மையத்திற்கு வந்தார். ஆனால், காலை முதல் 20பேருக்கு டோக்கன் வழங்கிவிட்டதாக தபால் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனார்.
இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பா தனது இரு குழந்தைகளுடன் நடுரோட்டில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அவரது குழந்தைகளுக்கு ஆதார் பதிவுக்காக தபால் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இளம்பெண் குழந்தைகளுடன் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் கவுன்டர்கள் அமைக்க கோரிக்கை!
திசையன்விளையில் தாலூகா அலுவலகத்தில் ஆதார் மையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவிற்கு கூடுதாக ஒரு கவுண்டர் அமைக்கவும், திசையன்விளை தாலூகா அலுவலகத்தில் ஆதார் பதிவு மையம் அமைக்கவும் மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சேகர் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.