» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பங்கு சந்தையில் லாபம் ஈட்டி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி : 3பேர் மீது வழக்குப் பதிவு
வெள்ளி 24, செப்டம்பர் 2021 3:48:25 PM (IST)
நெல்லையில் பங்கு சந்தையில் லாபம் ஈட்டி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை என்.ஜி.ஓ. ‘பி’ காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு நண்பர்கள் மூலம் பெருமாள்புரத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன், நெல்லை டவுனைச் சேர்ந்த சந்திரசேகர், திருச்செங்கோட்டை சேர்ந்த செந்தில் குமார் ஆகிய 3 பேருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த 3 பேரும் பங்குசந்தை மூலம் தாங்கள் அதிக பணம் லாபம் சம்பாதிப்பதாக முருகனிடம் கூறினார்கள். இதை நம்பி முருகன் தனக்கும் பங்குசந்தையில் அதிக லாபம் ஈட்டி தரும்படி, கடந்த ஜனவரி மாதம் ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் கொடுத்தார்.
பணத்தை பெற்றுக்கொண்ட 3 பேரும், பல மாதங்கள் கடந்த பிறகும் 3 பேரும் முருகனுக்கு லாபம் ஈட்டி கொடுக்கவில்லை. இதனால் முருகன் தான் கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பிறகு தருவதாக நாட்களை கடத்தினர். ஆனால் பலமுறை கேட்டும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முருகன் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செந்தில்குமார், சங்கரநாராயணன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.