» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பண்டிகைக் காலங்களில் இரவு நேர கடைகள் செயல்பட அரசு அனுமதி : விக்ரமராஜா வலியுறுத்தல்
வெள்ளி 15, அக்டோபர் 2021 12:13:32 PM (IST)
பண்டிகைக் காலங்களில் இரவு நேர கடைகள் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: தீபாவளி நேரம் என்பதால் அதிகாரிகள் எந்தக் கடைகளுக்கும் விதி மீறல்கள் எனக் கூறி அபராதம் விதிக்கக் கூடாது. பண்டிகைக் காலங்களில் இரவு நேர கடைகள் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். தென்காசி வேகமாக வளர்ந்து வரும் மாவட்டம் என்பதால் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டு வரும் மரங்களுக்கு பதிலாக புதிய சாலையின் இரு புறங்களிலும் கூடுதல் மரங்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். இச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வந்த 4 சுங்கச் சாவடிகளை தற்போதய அரசு அகற்றி உள்ளது. கூடுதலாக உள்ள சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும் என மத்திய அரசையும் வலியுறுத்தப் பட்டு வருகிறது.
அதே போல் இப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதரத்தைக் காக்க தென்காசி - திருநெல்வேலி நான்கு வழிச் சாலையிலும் சுங்கச் சாவடி அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. இது தொடர்பாக முதல்வருக்கு வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கை அளிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்புக்காக மெழுகு பூசி வரும் ஆப்பிள் போன்ற பழங்களை கடைகளில் வந்து ஆய்வு செய்து பறிமுதல் செய்யாமல், அவை எங்கிருந்து வருகிறதோ அங்கேயே தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலங்குளத்தில் காய்கனி பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், ஆலங்குளம் பாதுகாக்கப்பட்ட மலைப் பகுதி என்று உள்ளதால் பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.