» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு மருத்துவமனை வளாகத்தில் தூங்கியவர் ஆம்புலன்ஸ் ஏறி பரிதாப சாவு!
சனி 16, அக்டோபர் 2021 3:42:45 PM (IST)
தென்காசி தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியதில் பலியானார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கீழ ஆம்பூர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40). கூலித்தொழிலாளி. இவரது உறவினர் பெண் ஒருவர் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்ப்பதற்காக கடந்த 1-ம் தேதி பாலசுப்பிரமணியன் இரவில் வந்தார். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் பாலசுப்பிரமணியன் மருத்துவமனை வளாகத்திலேயே தரையில் படுத்து தூங்கினார்.
நள்ளிரவு 1-30 மணியளவில் ஒரு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த ஆம்புலன்ஸ், தரையில் படுத்திருந்த பாலசுப்பிரமணியன் வயிற்றில் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்காசி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்