» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 6, டிசம்பர் 2021 11:31:58 AM (IST)
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தை வெளியேற்றக் கோரி பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் மின் மோட்டார், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டாலும் சில குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வடியாமல் உள்ளது. குறிப்பாக மாநகர பகுதியில் சில இடங்களில் 10 நாட்களாகியும் தண்ணீர் வடியவில்லை.
இந்நிலையில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரம், ஆ.சண்முகபுரம், பவிஸ்ரீ நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வலியுறுத்தி ஆ.சண்முகபுரத்தில் தருவைகுளம் பிரதான சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தண்ணீரை அகற்றினால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதேபோல் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மாதா நகர் 6வது தெரு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனே அகற்ற கோரி சோட்டையன் தோப்பு பகுதியில் தூத்துக்குடி - ராமேஸ்வரம் பிரதான சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், மாதா நகர் 6-வது தெருவில் 20 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கி இருப்பதாகவும், மழை நீரில் கழிவுநீர் கலந்துள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தண்ணீரை உடனே அகற்றினால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.
மறியலின் போது, அந்த வழியாக வந்த அமரர் ஊர்திக்கு பொதுமக்கள் வழி கொடுத்துவிட்டு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். மழைநீர் வெள்ளத்தை அகற்ற கோரி தூத்துக்குடியில் இன்று காலை 4 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவி வருகிறது.
RaniDec 6, 2021 - 11:43:30 AM | Posted IP 162.1*****