» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றால அருவிகளில் குளிக்க அரசு அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
செவ்வாய் 7, டிசம்பர் 2021 4:21:47 PM (IST)
குற்றால அருவிகளில் வருகிற 20ம் தேதி முதல் குளிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. தென்காசி, குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் குளிர்ந்த காற்று பலமாக வீசியது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு 2-வது ஆண்டாக தற்போது தடை அமலில் உள்ளது.
இந்த சூழலில் குற்றாலம் அருவிகளில் வரும் 20ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் குற்றாலம் அருவிகள் திறக்கப்பட்டு, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், அருவிகளில் பராமரிப்பு மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.