» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் மீது லாரி மோதல் கேரளாவைச் சேர்ந்தவர் பலி : மகன் படுகாயம்
புதன் 8, டிசம்பர் 2021 8:19:36 AM (IST)
புளியரை அருகே பைக் மீது லாரி மோதியதில் தந்தை பரிதாபமாக இறந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.
கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்தவர் சுஜிவ் (வயது 47). இவரது மகன் ஷபான் (12). சுஜிவ் தனது மகனை அழைத்துக் கொண்டு ஒரு பைக்கில் செங்கோட்டைக்கு வந்து கொண்டு இருந்தார். புளியரை அருகே தமிழக-கேரள எல்லையான எஸ்.வளைவு பகுதியில் பைக் திருப்புவதற் காக சுஜிவ் நின்ற போது, பின்னால் இருந்து வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுஜிவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஷபான் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இதுகுறித்து உடனடியாக புளியரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த ஷபானை மீட்டு சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் பலியான சுஜிவ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த சித்திக் (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.