» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாதி மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம்: நெல்லை சரக புதிய டிஐஜி பிரவேஷ் குமார் பேட்டி
புதன் 12, ஜனவரி 2022 12:26:02 PM (IST)
நெல்லை சரக புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு இடமாற்றம் செய்யப்பட்டு சேலம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். மேலும், தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு திருநெல்வேலி சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பாளையங் கோட்டையில் உள்ள நெல்லை சரக அலுவலகத்தில் புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "நெல்லை சரகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ரவுடிசம் ஒழிக்கப்படும். குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் தடுப்பு, சாதி ரீதியான மோதல்களை தடுக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன். கஞ்சா கடத்தலைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நான் தஞ்சாவூரில் பணியாற்றிய போது கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள், அதுபோன்று இந்த பகுதியிலும் முற்றிலும் கஞ்சா கடத்தல் தடுக்கப்பட்டு அதில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகள் கண்டறிந்து கைது செய்யப்படுவார்கள். நெல்லை சரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு தேவையான வசதிகள் என்ன என்பதை அறிந்து மேம்படுத்தப்படும் எனதெரிவித்தார் .