» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பிப்.6ல் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 28, ஜனவரி 2022 5:20:13 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்டாப் செலக்ஷன் கமிஷனால் ஒருங்கிணைந்த பட்டதாரிகள் அளவிலான மேல்நிலைத் தேர்வு வருகிற 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஸ்டாப் செலக்ஷன் கமிஷனால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பட்டதாரிகள் அளவிலான மேல்நிலைத் தேர்வு (Combined Graduate Level Examination 2020) (TIER-III) (Descriptive Type) 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேக்தலீன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, ரகுமத்நகர், பாளையங்கோட்டை தேர்வு மையத்தில் வைத்து நடைபெற உள்ள இத்தேர்வினை 213 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர் மேற்படி தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், பேருந்துகளை தேர்வு மையத்திற்கு கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும், தேர்வு நடைபெறும் மையத்தின் அருகாமையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து தயார் நிலையில் வைத்திடவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் தேர்வர்கள் அதிக எண்ணிக்கையில் வர இருப்பதால் தேர்வு மையங்களில் ‘கொரோனா” பரவலை தடுக்கும் பொருட்டு சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு பராமரித்திடுமாறு, ஆணையர் (மாநகராட்சி) திருநெல்வேலிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங்களை கண்டறிந்து முன்கூட்டியே தேர்வு எழுத வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்திடவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிடவும் வேண்டும். மேலும், தேர்வு அறையினுள் செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.