» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சர்கார் திரைப்பட பாணியில் போராடி வாக்களித்த வாக்காளர் : நெல்லையில் பரபரப்பு
சனி 19, பிப்ரவரி 2022 4:53:34 PM (IST)
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட டவுன் 26-வது வார்டில் வாக்காளர் ஓட்டு கள்ள ஓட்டாக போட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தில் தனது வாக்கை வேறு ஒருவர் கள்ள ஓட்டு போட்டு சென்றதால் விஜய் போராடி ஓட்டு போடுவது போன்ற காட்சி இடம் பெற்றது. அதன் பிறகு இதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. இந்நிலையில் நெல்லையில் இன்று அதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட டவுன் 26-வது வார்டில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று பொதுமக்கள் வாக்களித்தனர்.
அங்கு 26-வது வார்டை சேர்ந்த நாகராஜன் என்பவர் இன்று காலை வாக்களிக்க வந்தார்.அப்போது தேர்தல் அலுவலர்கள் ஏற்கனவே நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் என்று கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவரது வாக்கை வேறு ஒருவர் கள்ள ஓட்டு போட்டு சென்றது தெரியவந்தது. இதனால் இந்து முன்னணி மாநில தலைவர் குற்றால நாதன் உதவியுடன் தன்னை வாக்களிக்க அனுமதிக்குமாறு தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய படிவம் 14-ஐ பூர்த்தி செய்து நாகராஜன் ஓட்டுப்பதிவு செய்தார்.