» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குவாரிகள் விதிமுறைகள் மீறல் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை
புதன் 22, ஜூன் 2022 10:17:12 AM (IST)
குவாரிகள் விதிமுறைகள் மீறல் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாலை விதிகளின் படி குவாரிகள் அமைந்துள்ள கிராமசாலைகளில் லாரி எடையுடன் சேர்த்து 20 டன் அளவிற்கு மேல் மிகாமல் கனிம வளங்களை ஏற்றி செல்லத்தான் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். அதற்குமேல் கனரக வாகனங்கள் கிராம சாலைகளில் சென்றால் ஊர் மக்களே மறியல் செய்து வாகனத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம்.
சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்கின்றவாறு அகலபடுத்தியும் பாலங்களை வலுபடுத்தியும் தான் கனரக வாகனங்களை இயக்க வேண்டும். அதையும் மீறி வாகனத்தை இயக்கினால் பொதுமக்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தான் அதற்குப் முழு பொறுப்பேற்க வேண்டும்.
மோட்டார் வாகன சட்டத்திற்கு விரோதமாக அதிக எடையுடன் வாகனங்கள் சாலைகளில் சென்றால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து மோட்டார் வாகன சட்ட அனைத்து பிரிவுகள் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வு செய்யாமலேயே மீண்டும் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு நியாயம் என்று தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.
அடை மிதிப்பான் குளம் விபத்து போல ஏதாவது உயிர் சேதம் ஏற்பட்டால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் குழு அமைத்து எல்லா குவாரிகளிலும் ஆய்வு செய்யப்பட்டது அந்த ஆய்வின் முடிவில் ஏறக்குறைய எல்லா குவாரிகளும் விதி மீறல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இது சம்பந்தமாக அரசு உடனே வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் இதுபோன்றுதான் அனைத்து குவாரிகளும் இயங்கி வருகின்றன. உடனடியாக குழு அமைத்து அரசு விதி மீறுபவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திலுள்ள கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு சென்று எதிர்கால சந்ததியினருக்கு கனிம வளங்களே இல்லை என்று சொல்லக் கூடிய நிலையை ஏற்படுத்துவதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா என்பதனை தமிழக அரசு விளக்க வேண்டும்.இவ்வாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவி அருணன் தெரிவித்துள்ளார்.