» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே வீடு புகுந்து 6 மாத குழந்தை கடத்தல் : 2 பெண்கள் உட்பட 3பேர் கைது!
புதன் 22, ஜூன் 2022 12:32:58 PM (IST)
நெல்லை அருகே வீடு புகுந்து 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கீழ பாப்பாக்குடி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(22). இவரது மனைவி இசக்கியம்மாள்(20). இவர்களுக்கு பிரியங்கா என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் கேரளாவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் குழந்தையை பார்ப்பதற்காக கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு அவர் வந்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் கார்த்திக் எழும்பி பார்த்தபோது அவர்களது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் பாப்பாக்குடி போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் விசாரணை செய்து 36 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர். இது குறித்து அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறியது: ஜூன் 20-ம் தேதி குழந்தை காணவில்லை என்று இசக்கியம்மாள் புகாரளித்ததையடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் எனது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்றது. மேலும் கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் செல்பேசி உதவியுடன் புகாரளித்த 36 மணி நேரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது.
இதையடுத்து குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டதாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஆலங்குளத்தைச் சேர்ந்த கணபதி மகன் கார்த்திகேயன் (34), கீழப்பாப்பாக்குடி பள்ளிக்கூடத்தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி கனியம்மாள் (57), ஜெகன் மனைவி முத்து செல்வி (30) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை நன்கு அறிமுகமானவர்களிடம் கொடுத்தாலும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.