» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. சுயமாக செயல்படவில்லை : முத்தரசன் பேட்டி
வியாழன் 23, ஜூன் 2022 11:59:44 AM (IST)
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. சுயமாக செயல்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
பாளையங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மண்டல மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்று பேசினார். வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி ரெங்கன் மாநாட்டு கொடியை ஏற்றினார்.
மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட துணை செயலாளர் லட்சுமணன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சடையப்பன், ராமகிருஷ்ணன், சேதுராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் பெரும்படையார், மாவட்ட குழு உறுப்பினர் உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 25-வது மாநில மாநாடு வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை திருப்பூரில் நடக்கிறது. இதில் டி.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் தேசிய, மாநில, சமூக பிரச்சினை குறித்து விவாதம் செய்யப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
மாறாக பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான சட்டங்களையே கொண்டு வந்துள்ளனர். அக்னிபத் திட்டம் இளைஞர்களை ஏமாற்றும் திட்டம். இதனை கைவிட வேண்டும். எந்த அரசியல் கட்சியினரும் இளைஞர்களை போராட தூண்டவில்லை. அவர்கள் தன்னெழுச்சியாகவே போராடுகிறார்கள். இளைஞர்களின் வேலை நெருக்கடியை மத்திய அரசு அக்னிபத் திட்டத்தின் மூலம் பயன்படுத்தி கொள்கிறது. 4 ஆண்டுகள் பணி முடித்து வெளிவரும் இளைஞர்களின் நிலை கேள்விக்குறியாகும் சூழல் நிலவும்.
ராணுவத்தில் ஆள் சேர்க்க பின்பற்றப்பட்டு வந்த பழைய நடைமுறையே தொடர வேண்டும். அக்னிபத் திட்டம் குறித்து ராணுவ தளபதிகள் தலையிட்டு கருத்துகள் சொல்வது தவறாகும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குடியரசு தலைவர் தேர்தலில் செயல்பட்டால் பா.ஜனதா வேட்பாளரை தோற்கடிக்க முடியும். இது 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய பயனளிக்கும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. சுயமாக செயல்படவில்லை. ஒற்றை தலைமையா? அல்லது இரட்டை தலைமையா? என்பதை அ.தி.மு.க.வை இயக்குகிறவர்கள் முடிவு செய்வார்கள் என்று முத்தரசன் கூறினார்.
JAY RASIGANJun 23, 2022 - 01:55:34 PM | Posted IP 162.1*****