» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பள்ளி மாணவர்களின் தொழிற்கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வாகனம்: நெல்லையில் துவக்கம்!
வியாழன் 23, ஜூன் 2022 12:40:29 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவ,மாணவியரிடையே தொழில் கல்விக்கான ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக பயிற்சி வாகனத்தை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ,மாணவியரிடையே தொழில்கல்விக்கான ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக "Skills on Wheels" என்ற நடமாடும் பயிற்சி வாகனத்தை 23-06-2022 அன்று அரசுசெயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை மகேஷன்காசிராஜன், முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் திருவே. விஷ்ணு, வாகனத்தை பார்வையிட்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது "திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு தொழில்கல்வி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் இந்த வாகனத்தில் பயிற்சிகள் நடத்தப்படும். இந்த வாகனம் நமது மாவட்டத்தில் தினந்தோறும் ஒரு பள்ளி வீதம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 அரசுப்பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள மாணவ, மாணவியர்களுக்கு இதில் வைத்து பிளம்பிங், ஆட்டோமொபைல், மின்இணைப்பு, விவசாயகருவிகளை இயக்குவது, உணவுப்பொருள் பதனிடுதல் போன்ற பல்வேறு தொழில்களுக்கான அடிப்படை பயிற்சிகளை வழங்கும். இதில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் மேல்படிப்புகளில் தொழில்கல்வி சார்ந்த பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற படிப்புகளை படிப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என நம்புகிறோம்.
அதற்கான அடிப்படை பயிற்சிகள் மற்றும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்தவாகனத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும். இன்று திருநெல்வேலி டவுண் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் (கல்லணை) முதலாவது பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகும். வருகின்ற இரண்டு வாரங்களில் இந்த வாகனம் நமது மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்த பயிற்சிகளை வழங்கும். இந்த புதிய முயற்சியை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கனராவங்கி தனது நிறுவன சமூக பொறுப்பு நிதியின் மூலம் "லெண்ட் எ ஹேண்ட்" என்ற அமைப்பின் வழியாக செயல்படுத்துகிறது" என தெரிவித்தார்.
இந்த பயிற்சி வாகனத்தின் துவக்க விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, ஓழுங்கு நடவடிக்கை ஆணையாளர் சுகன்யா,, தேசிய தகவலியல் மைய இயக்குநர் ஆறுமுகநயினார், திறன் மேம்பாடு திட்ட உதவி இயக்குநர் ஜார்ஜ்பிராங்கிளின், கனராவங்கியின் துணை பொது மேலாளார் தில்லிபாபு, தொழில்கல்வி பயிற்று விப்பாளர்கள் திருசத்யபிரகாஷ், கணேஷ், ராஜேஸ், டிஸ்சூன், மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ,மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.