» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை பலி: பாவூர்சத்திரம் அருகே சோகம்!
வெள்ளி 24, ஜூன் 2022 11:31:24 AM (IST)
பாவூர்சத்திரம் அருகே வீட்டில் விளையாடியபோது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலியானது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (28). இவர் பீடி கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி (26). பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுடைய 1½ வயது ஆண் குழந்தை பெயர் அஸ்வந்த்.
வீட்டின் முன்புறம் அஸ்வந்த் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தரையில் பதித்து வைத்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக அவன் தவறி விழுந்தான். இதை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து விளையாடிய குழந்தையை காணவில்லை என்று தேடியபோது, தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
குழந்தையின் உடலை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.