» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தபால்காரர்களிடம் ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்: அதிகாரி தகவல்!

சனி 25, ஜூன் 2022 4:12:02 PM (IST)

வீடு தேடி வரும் தபால்காரர்களிடம் ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: மாநில அரசின் ஓய்வூதியம் பெறுகின்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை அவர்களது வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கும் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வூதியர்கள் வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளித்திருந்தது. இந்த ஆண்டு சுமார் 7 லட்சத்து 17 ஆயிரத்து 761 ஓய்வூதியம் பெறுவோர் வருகிற ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ஓய்வூதியர்கள் சிரமமில்லாமல் தங்கள் வீட்டுக்கு வருகின்ற தபால்காரர்களிடம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த குறுகிய காலத்தில் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் உள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் அஞ்சலகங்களில் வங்கி சேவையை விரிவுபடுத்தி 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அஞ்சலகங்கள் மூலமாக ஸ்மார்ட் போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ள 12 ஆயிரத்து க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் ஊழியர்கள் மூலமாக வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. எனவே ஓய்வூதியர்கள் தங்கள் வீட்டிற்கு வரும் தபால்காரர்களிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory