» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றால அருவியில் வெள்ளபெருக்கில் சிக்கி 2 பெண்கள் பலி : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
புதன் 27, ஜூலை 2022 8:32:18 PM (IST)

குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3பேர் மீட்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்திற்கு படையெடுத்தபடி உள்ளனர். இன்று பலத்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் இரவு 7 மணி அளவில் மெயின் அருவியில் திடீரென்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அருவியில் இருபகுதிகளில் குளித்துக் கொண்டு இருந்த ஆண், பெண் சுற்றுலா பயணிகளை வேகமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த வெள்ளப்பெருக்கில் எதிர்பாராத விதமாக 4 பெண்கள், ஒரு ஆண் என 5 பேர் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்த அங்கு இருந்த போலீசார் மற்றும் சக சுற்றுலா பயணிகள் ஆண் நபரையும், 2 பெண்களையும் பத்திரமாக மீட்டனர். ஆனால், மற்ற 2 பெண்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
இதுகுறித்து உடனடியாக குற்றாலம் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, வெள்ளம் செல்லும் பகுதியில் பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அருவிக்கரையில் இருந்து சிறிது தூரத்தில் அந்த 2 பெண்களின் உடல்கள் மிதந்தன. உடனே தீயணைப்பு படையினர் அங்கு சென்று 2 பெண்களின் உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியல் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி மல்லிகா (46), பண்ருட்டியைச் சேர்ந்த ராஜாராம் மனைவி கலாவதி (55) என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
ஆட்சியர் ஆய்வு
இதற்கிடையே, தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மெயின் அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 பேர் சிக்கினர். இதில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து உள்ளனர்.
குற்றாலம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக கூடுதலாக போலீசார் நியமிக்கப்படுவார்கள். மேலும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியே வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)
