» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியது: நடிகர் சூரி, ரம்யா பாண்டியன் கலைநிகழ்ச்சி!

சனி 6, ஆகஸ்ட் 2022 5:10:11 PM (IST)



குற்றாலத்தில் சாரல் திருவிழாவை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

குற்றாலத்தில் சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சாரல் திருவிழா புதிய தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக நேற்று கலைவாணர் கலையரங்கத்தில் தொடங்கியது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், "நான் இங்கு வரும்போது கார்மேகம் சூழ்ந்து சாரல் மழை பொழிந்து வரவேற்பது போல் உள்ளது. இந்த மாவட்டம் புதிய மாவட்டம். இங்கு அதிக வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். முதல்-அமைச்சரின் முயற்சியால் பல்வேறு தொழில்கள் இங்கு தொடங்க முதலீடுகள் வந்துள்ளன. எனவே இது ஒரு நல்ல ஆட்சி. தமிழகத்திற்கு இது பொற்காலம்" என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "சில நேரங்களில் சாரல் மழை இருக்காது. தண்ணீர் வராமலேயே சாரல் விழா நடந்துள்ளது. தற்போது சாரல் களை கட்டி உள்ளது. ரம்மியமான சூழல் உள்ளது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. வரலாற்று சிறப்புமிக்க சித்திர சபை இங்கு உள்ளது. பராக்கிரம பாண்டியன் வானுயர கட்டிய ராஜகோபுரம் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைகுமார், செல்வப் பெருந்தகை, காந்திராஜன், சிந்தனைச்செல்வன், வேல்முருகன், ரூபி மனோகரன், ராஜா, மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ், பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர், குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி தெய்வீகன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவ பத்மநாதன், செல்லதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சினிமா நகைச்சுவை நடிகர் சூரி, டி.வி. புகழ் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சி உள்பட பரதநாட்டிய நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory