» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரலாக கலைச்செல்வி நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஞாயிறு 7, ஆகஸ்ட் 2022 7:49:48 PM (IST)
சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்ட மூத்த விஞ்ஞானி கலைச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானியான கலைச்செல்வி, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்சி கவுன்சிலின் (CSIR) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1942ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 38 ஆய்வகங்கள் உள்ளன.
அதில் 4,600 விஞ்ஞானிகள், 8,000 தொழில்நுட்ப நிபுணர்கள் என 14,000க்கும் மேலானோர் பணியாற்றி வருகிறார்கள். முதல் நிலை விஞ்ஞானியாக ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கிய கலைச்செல்வி, தற்போது அதே சி.எஸ்.ஐ.ஆரின் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார்.
இவர் தனது பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் படித்து முடித்தவர்.தமிழ்நாடு காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக்கும் கலைச்செல்விதான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானத் துறையில் பணியாற்றி வரும் கலைச்செல்வி 125க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி ஆறு காப்புரிமைகளையும் பெற்றிருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர் இந்தியாவின் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்! தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.