» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அணுமின் நிலைய அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை!
திங்கள் 19, செப்டம்பர் 2022 3:51:59 PM (IST)
கூடங்குளத்தில், அணுமின் நிலைய அதிகாரி வீட்டில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த அசோகன் (55) பணியாற்றி வந்தார். இவர் கூடங்குளத்தை அடுத்த செட்டிகுளம் அணுவிஜய் நகரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அசோகன் கடந்த 1-ந்தேதி கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலையத்துக்கு பணியிட மாறுதலாகி சென்றார். இதனால் செட்டிகுளத்தில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாததால் பூட்டி கிடந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் அசோகனின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கூடங்குளம் போலீசாருக்கும், அசோகனுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அசோகனின் வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதுகுறித்து அசோகனிடம் போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அப்போது அவர் பீரோவில் 50 பவுன் நகைகள் வைத்திருந்ததாக தெரிவித்தார். எனவே அவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அசோகனின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்து 50 பவுன் நகைகளையும் கொள்ளையடித்தனர்.
மற்றொரு வீட்டிலும் திருட முயற்சி
இதேபோன்று செட்டிகுளம் அணுவிஜய் நகரத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி ராமன் வீட்டிலும் மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு நகை, பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பாதுகாப்பு மிகுந்த செட்டிகுளம் அணுவிஜய் நகரத்தில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.