» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பழைய குற்றாலத்தில் போலீஸ்காரரை தாக்கிய சுற்றுலா பயணிகள் 4 பேர் கைது
செவ்வாய் 20, செப்டம்பர் 2022 10:21:00 AM (IST)
பழைய குற்றாலம் அருவிக்கரையில் போலீஸ்காரரை தாக்கியதாக சுற்றுலா பயணிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவிக்கரையில் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் செய்யது மசூது (30) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிலர் குடிபோதையில் தகராறு செய்வதாக, சுற்றுலா பயணிகள் அவரிடம் கூறினர். உடனே செய்யது மசூது அங்கு சென்று அவர்களிடம் பொது இடத்தில் தகராறு செய்யக்கூடாது என்று எச்சரித்தார்.
உடனே அங்கு தகராறு செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் விருதுநகர் மாவட்டம் வடமலாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (43), சுப்பிரமணியன் (27), நாரணபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (26), திருமங்கலம் அருகே உள்ள கள்ளிகுடியைச் சேர்ந்த முருகேசன் (49) ஆகியோர் செய்யது மசூதுவை கண்டபடி திட்டிக் கொண்டு நாங்கள் அப்படித் தான் செய்வோம், உன்னால் என்ன செய்ய முடியும்? என்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் சத்தம் போடவே அருகில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து 4 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து குற்றாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் தாமஸ், 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.